மோட்டார் வாகன விதிகளை பின்பற்றி வாகனம் இயக்கினால் 90% விபத்துக்கள் குறையும்!!

 -MMH

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழா ஆண்டையொட்டி பொள்ளாச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவில் சப்-கோர்ட்டு நீதிபதி பாலமுருகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு கனரக வாகனங்கள் உரிமம் பெறுவதற்கு குறைந்தது 10-ம் வகுப்பு கல்வி தகுதி இருந்தது. தற்போது கல்வி தகுதியே தேவையில்லை என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கனரக வாகன ஓட்டுனர்கள் மோட்டார் வாகன விதிகள் குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். மோட்டார் வாகன விதிகளை முறையாக பின்பற்றினால் 90 சதவீத விபத்துகளை குறைக்கலாம். 75 சதவீத விபத்துகள் இருசக்கர வாகனங்களால் நடைபெறுகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி, பொள்ளாச்சி ஜே.எம். 2 கோர்ட்டு நீதிபதி செல்லையா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்,

Comments