விபத்தின்றி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு! தீயணைப்பு நிலையம் சார்பில் செயல்முறை விளக்கம்!!

 -MMH

தீபாவளியை முன்னிட்டு விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப் பது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையம் சார்பில் பல்வேறு பகுதியில் நடந்தது. கிணத்துக்கடவு ஏழூர் பிரிவில் உள்ள பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமை தாங்கினார். 

இதில் தீயணைப்புத்துறையினர் பலர் கலந்து கொண்டு விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அத்துடன் துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள்.

தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டும் உள்ளது. இந்தநிலையில், சுல்தான்பேட்டை, சூலூர் பகுதிகளில் பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:- 

பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான ஆடைகளை அணியவேண்டும். முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அருகில் இல்லாதவாறுபார்த்துக்கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது காலணிகள் அணிவது அவசியம். பட்டாசு வெடிக்கும் போது வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். 

விபத்து நடந்த பின் மருத்துவரை அணுகுவதை விட விபத்து நேராமல் பார்த்து கொள்வது மிக அவசியம்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வருகின்ற தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் விபத்தின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இதில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments