பொள்ளாச்சி திமுக கோட்டை ஆனது-கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ்..!

  -MMH

  ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதேபோல பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது.

வால்பாறை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இப்பதவிக்கு அரசியல் கட்சிகளின் அதிகாரபூர்வ சின்னங்கள் ஒதுக்கப்படாமல், சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் என்பவர் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்திலும், அதிமுக சார்பில் சரோஜினி முனியன் பூட்டு சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர்.

திவான்சாபுதூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. அதில் 8572 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 6552 பதிவான வாக்குகள் பதிவாகின.

அந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் 4372 வாக்குகளும், அதிமுக வேட்பாளார் சரோஜினி முனியன் 2075 வாக்குகளும் பெற்றனர். 105 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் அதிமுக வேட்பாளர் சரோஜினி முனியன் விட 2297 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரி சாய் ராஜ் சுப்பிரமணியமிடம் கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்றதுக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

பின்னர் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'கோவை மாவட்டத்தில் திமுக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் வார்டு இடைத்தேர்தல், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி தேர்தலிலும் திமுக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 25 வருடமாக அஇஅதிமுகவினர் மக்களை அடிமைபடுத்தி வைத்திருந்தனர்.

அஇஅதிமுக 12 வார்டுகளிலும் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த வெற்றியை திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்' என அவர் தெரிவித்தார். இதில் வெற்றி பெற்ற வேட்பாளர் கலைவாணி சிலம்பரசனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

25 வருடங்களாக அதிமுக கோட்டையை கைப்பற்றியதோடு, அதிமுக தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக வென்றிருப்பது, அக்கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments