மது போதையில் முதியவரிடம் பணம் கேட்டு அடாவடி! பணம் இல்லை என்று சொன்னதால் தலையில் கல்லைப் போட்ட கொடூரம்!!

    -MMH

கோவை மாநகரில் சாலையோரங்களில் ஆதரவற்ற பலர் இரவு நேரத்தில் படுத்து வருகிறார்கள். அவர்கள் பகல் நேரத்தில் கிடைக்கும் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் கிடைக்கும் இடங்களில் தூங்கி வருகின்றனர். இந்த நிலையில் காட்டூர் ராம்நகர் அன்சாரி வீதியில் பழனியை சேர்ந்த ராஜன் (வயது 60) என்பவர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் குடிபோதையில் வந்த சிலர், ராஜனிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டு உள்ளனர். 

அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், ராஜனை தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜன் அலறி துடித்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், சாலையோரம் படுத்திருந்த தந்தை-மகன் உள்பட 4 பேர், ராஜனின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயன்றது தெரிய வந்தது. தற்போது தலைமறைவாகிவிட்ட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments