வேன் மோதி மொபட்டில் சென்ற தம்பதி பலி!! காவல்துறையினர் விசாரணை!!

 -MMH

திருப்பூர் மாவட்டம் உடுமலை அன்சாரி வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவர் பொக்லைன் எந்திர உரிமையாளர். இவருக்கு கிருத்திகா (33) என்ற மனைவியும், விஷ்ணுதேவி (12) என்ற மகளும் இருந்தனர்.  

இந்த நிலையில் கோலார்பட்டியில் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு பழனிசாமி குடும்பத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தனது, மனைவி மற்றும் மகளுடன்  மொபட்டில் உடுமலைக்கு சென்று கொண்டிருந்தார். 

கோமங்கலம் தாண்டி ஒரு தனியார் கல்லூரி அருகே சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த ஆம்னி வேன் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மொபட்டில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருத்திகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயமடைந்த பழனிசாமி, சிறுமி விஷ்ணுதேவி  ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.  

பின்னர் மேல்சிகிச்சைக்காக பழனிசாமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். சிறுமி விஷ்ணு தேவிக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்தை ஏற்படுத்திய உடுமலை வாளவாடியை சேர்ந்த வேன் டிரைவர் தட்சணாமூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி, ராஜேந்திரன்.

Comments