பொள்ளாச்சி பாலியல் வழக்கு! மட்டன் பிரியாணிக்கு ஆசைபட்டு சலுகை!!

  -MMH

பொள்ளாச்சியில் இளம்பெண்களை நிர்வாணமாக்கி அதனை வீடியோ பதிவு செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அருளானந்தம் உட்பட 4 பேர் கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை ரகசியமாக நடக்க வேண்டும் என்பதால், நீதிமன்றத்தில் பூட்டிய அறைக்குள் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சேலத்தில் இருந்து திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் போலீஸ் வேனில் அழைத்து சென்றனர் .

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் திரும்பும் போது கோவை பீளமேடு அருகே நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி கைதிகளை உறவினர்களுடன் பேச வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது . இது தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் விதிமுறைகளை மீறி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது உறுதியானதால், சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம் உட்பட 7 பேரும் புதன்கிழமை இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடந்தது என்ன என்பது குறித்து சஸ்பெண்டான 7 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது .

விசாரணையில், மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. கோவை நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் போலீசாரிடம் கேட்டுள்ளனர். நீண்ட நாட்களாக மட்டன் பிரியாணி சாப்பிடவில்லை. நீங்களும் பசியாக இருப்பீர்கள், அனைவருக்கும் வீட்டில் இருந்து தயாரித்த மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம் என போலீசாரிடம் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக்கூடாது என போலீசார் கூறியுள்ளனர். அதன்பிறகு தான் பீளமேடு வரை வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளார்கள். அங்கு போலீசாரின் வாகனத்தை நிறுத்தி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர். பின்னர் கைதிகளுடன் உறவினர்கள் பேசி உள்ளனர். இந்த சந்திப்பு 7 நிமிட நேரம் மட்டுமே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொண்டு அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு விட்டு சேலம் திரும்பியது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.


Comments