டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமா?

 

   -MMH

  இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஊசி போடப்படுகிறது. கடந்த 21-ந் தேதி இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இதுவரை நாடு முழுவதும் 103 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. 72 கோடி பேர் முதல் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். 31கோடி பேர் 2-வது தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

முதல் ஊசி போட்டவர்கள் குறிப்பிட்ட தவணை காலத்திற்கு பிறகு 2-வது ஊசி போட வேண்டும். ஆனால் தவணைக்காலம் முடிந்த பிறகும் சுமார் 11 கோடி பேர் 2-வது தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். 32% பேர்தான் 2-வது தவணை ஊசியும் போட்டுள்ளனர்.

தற்போது தடுப்பூசி தாராளமாக கிடைக்கிறது. மத்திய அரசு, மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த தடுப்பூசி மருந்துகளில் 12 கோடியே 37 லட்சம் டோஸ் மருந்து இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

தாராளமாக மருந்து கிடைத்தும் சிலர் ஊசி போட ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். இதனால்தான் அனைவருக்கும் இன்னும் தடுப்பூசி போட முடியாமல் இருக்கிறது.

எனவே, ஊசி போடாமல் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஒரு தடவையாவது ஊசி போட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, டிசம்பர் இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசியை ஒரு தடவையாவது போட்டுவிட வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தி உள்ளார். 11 மாநிலங்களில் தடுப்பூசி போடுவது குறைவாக இருக்கிறது. அங்கு வேகமாக பணிகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இதற்கிடையே, தடுப்பூசி போடுவதை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக நேற்று அனைத்து மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மன்டேவியா ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இது சம்பந்தமாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு பிறகு நோய் தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 30 நாட்களில் 20 ஆயிரத்து 936 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் மாநிலத்தின் மொத்த தொற்றில் 3.4% ஆகும். அதேபோல 343 பேர் உயிரிழந்துள்ளனர். இது 4.7% ஆகும். எனவே நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு மேற்கு வங்க அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

- அப்துல்சலாம்.

Comments