காவல் நிலையத்தில் இருந்து தப்பிய காதல் ஜோடிகள்! வாலிபர் போக்சோவில் கைது! !

 

  -MMH

   கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு சுங்கம் பகுதியை சேர்ந்த பெயிண்டரான சதீஷ்குமார் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. 

எனவே இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர் கள் வீடுகளில் தேடி பார்த்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமி குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் சதீஷ்குமார் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததும், 2 பேரும் பேரூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து  போலீசார் அங்கு சென்று சிறுமியை யும், சதீஷ்குமாரையும் மீட்டனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்தில் அமர வைத்தனர். 

மேலும்  ஆயுதபூஜை என்பதால் போலீஸ் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜோடியினர், அங்கிருந்து நைசாக வெளியேறி தப்பி ஓடினார்கள். 

பின்னர் போலீசார் சிறிது நேரம் கழித்து சுத்தப்படுத்தும் பணியை முடித்து வந்தபோது, 2 பேரும் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர்களை காணவில்லை. அப்போதுதான் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியது போலீசாருக்கு தெரியவந்தது. 

தொடர்ந்து போலீசார் சதீஷ்குமார் மற்றும் அந்த சிறுமியை தீவிரமாக தேடினார்கள். அப்போது 2 பேரும் ராமநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிவது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்து மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். 

இதையடுத்து சிறுமியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் சதீஷ் குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறுமி மீட்கப்பட்டு கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments