கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த டெக்னாலஜி வாலிபர்! கண்காணிப்பு கேமராவால் மாட்டிக்கொண்ட பல நாள் திருடன்!

 

-MMH

     கோவையை அடுத்த நீலாம்பூரை சேர்ந்தவர் சித்திக் (வயது 31). இவர் அந்த பகுதியில் கணினி பழுதுபார்க்கும் கடை வைத்து உள்ளார். திருட்டு அச்சம் காரணமாக கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தார்.  அதை வீட்டில் இருந்தபடியே தனது செல்போனில் பார்க்கும் வசதியையும் ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அதிகாலை சித்திக் தனது செல்போன் மூலம் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சியை ஆய்வு செய்தார். 

அப்போது கடையை உடைத்து ஒரு நபர் உள்ளே புகுந்ததும், அவர் அங்கு பணம் இருக்கிறதா என்று தேடுவதும் பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தனது மோட்டார் சைக்கிள் மூலம் கடைக்கு சென்றார்.  இதற்கிடையே கடைக்குள் பணம் எதும் இல்லாததால் வெளியேறிய அந்த நபர், அங்கிருந்த பஸ்நிறுத்ததில் இருந்து பஸ்ஏறி சென்றார். அதை பார்த்த சித்திக், அதே பஸ்சில் ஏறியதுடன், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் அந்த நபர் குறித்து எடுத்துக்கூறி பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை கொண்டு செல்ல வலியுறுத்தினார்.  

அதன்படி பஸ் போலீஸ்நிலையம் கொண்டு செல்லப்பட்டது, இதனை கண்டதும் பஸ்சை விட்டு இறங்கி தப்ப முயன்றார். உடனே சித்திக் மற்றும் பயணிகள் பிடித்து அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர் கோவையை சேர்ந்த சரவணன் (60) என்பதும், இவர் மீது ஏற்கனவே சரவணம்பட்டி, சாய்பாபாகாலனி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில்8 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், சரவணனிடம் இருந்து இரும்பு கம்பி, உளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்டத் தலைமை நிருபர்  

-S.ராஜேந்திரன் .

Comments