சார்பு ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது! கொலையாளிகள் சிக்கியது எப்படி?

 

-MMH

     திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன் நேற்று அதிகாலை ஆடு திருடிச்சென்ற நபர்களை மடக்கிப் பிடித்தார். அப்போது திரும்பி செல்போனில் பேசிக்கொண்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதனை திருட்டுக்கும்பல் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளது. இந்த சம்பவத்திலேயே சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர். கொலை செய்யப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் காவலர் சேகரிடம் செல்போனில் பேசிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன் பிடிபட்ட நபர்கள் தேனீர்பட்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் தனிப்படையினர் தேனீர்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதனின் பின்தலையில், கறி வெட்டும் அரிவாள் போன்ற பலமான ஆயுதத்ததால் வெட்டப்பட்டிருந்ததால் கறிக்கடை தொடர்புடைய ஆட்கள் கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகித்தனர்.

இந்நிலையில் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்களின் மூலம் காவல்துறையினர் விசாரணையைத் துவக்கினர். அப்போது சம்பவ இடத்திலிருந்த 2 செல்போன்கள், புதுக்கோட்டை - பொன்னமராவதிக்கு இடையில் இருப்பதைக் கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினர், நேற்று மதியம் அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் கொலையாளிகள் மதியத்திற்கு மேல் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.

தொடர்ந்த விசாரணையின் காரண்ண இன்று அதிகாலை கொலையாளிகள் 4 பேரையும் பிடித்தனர். இவர்களில் 2 பேர் சிறுவர்கள். கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் காவல்துறையினருக்குத் தெரியவந்ததுள்ளது. கொலையாளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பிடிபட்டவர்களில் ஒருவர் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதும், மற்றொருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் மற்றொருவர் மணிகண்டன் (19) என்பதும் அவர் மீது காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாரூக், ராயல் ஹமீது.

Comments

Anonymous said…
விரிவான செய்தி அருமை. தொடரட்டும் நாளைய வரலாறு