கோவை அருகே தங்க நகை வியாபாரியிடம் கத்தி முனையில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.7 லட்சம் பறிப்பு!!
கோவை அருகே தங்க நகை வியாபாரியிடம் கத்தி முனையில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (50). தங்க நகை வியாபாரி. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு சென்று சொந்தமாக தங்கத்தை வாங்கி வந்து பின்னர், அதனை நகைகளாக மாற்றி சத்தியமங்கலத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்த வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை சத்தியமங்கலத்திற்கு சென்ற சண்முகம் அங்கு 2 கிலோ தங்கத்தை வாங்கிக்கொண்டு இரவில் கோவை வந்துள்ளார்.
பின்னர், காந்திபுரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வடவள்ளி நோக்கி புறப்பட்டார். தொண்டாமுத்தூர் அருகே வந்தபோது அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், திடீரென சண்முகத்தை வழிமறித்தனர். பின்னர், கத்திமுனையில் அவரை மிரட்டி தாக்கிய கொள்ளையர்கள், அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம், ரூ.7 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து சண்முகம் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-சுரேந்தர்.
Comments