இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் 7வது மாநாடு கோவையில்!!

   -MMH 

   கோவை:  இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அலுவலகம் சார்பில் 7வது மாநாடு கோவையில் வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது 

இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.அப்போது தென்னிந்திய தலைமை அலுவலகத்தின் தலைவர் ஜலபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்திய பட்டய கண்க்காளர் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அளவிலான மாநாடு கோவையில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைக்கிறார்.இம்மாநாட்டின் நேரடி சிறப்பு விருந்தினர்களாக தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் நிஹார் என்.ஜம்புசாரியா, ஐ.சி.ஏ.ஐ முன்னாள் தலைவர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.இதில் நேரடியாக 750 பட்டய கணக்காளர்களும், இணைய வாயிலாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர்.இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவத்திற்கு இந்தியா முழுவதும் 165 பயிற்சி நிறுவனங்களும், தென்னிந்திய அளவில் 45 நிறுவனங்களும், தமிழக அளவில் 12 நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பட்டய கணக்காளர் (சி.ஏ) படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.இந்த காலகட்டத்தில் சி.ஏ படிப்பை படிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 45% பெண்கள் இந்த படிப்பை படிக்க முன்வருகின்றனர். ஏராளமான வேலை வாய்ப்புகள் இந்த துறையில் உள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக எங்கள் நிறுவனமும் தமிழக அரசும் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த படிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சி வழங்கப்படுகிறது. அதோடு, கொரோனா காலத்தில் தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு முழுக்க முழுக்க இலவச பயிற்சி வழங்குகிறோம். அதோடு, சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்துள்ளோம். அதன்படி ,கொரோனா காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5.2 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளோம். எங்களது கோவை கிளை சார்பில் மக்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி பயிலும் மாணவர்கள் எங்களது இணையத்தள பக்கத்திற்கு சென்று, பயிற்சி, ஸ்காலர்ஷிப் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். கோவையில் துடியலூரில் எங்கள் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கோவை கிளையின் தலைவர் பிரபு, செயலாளர் நாககுமார், பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments