வால்பாறை-பன்னி மேடு இடையே உடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்! !

    -MMH 

   வால்பாறை பகுதியில்  கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த 2-வது வாரம் வரை கனமழை பெய்தது. இதனால் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை, வால்பாறையில் இருந்து சோலை யாறு அணைக்கு செல்லும் சாலை, பன்னிமேடு மற்றும் கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் சாலையில் மண்சரிவும், உடைப்பும் ஏற்பட்டது.

இதில் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் பல இடங்களில் முடிந்து விட்டன. வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் உருளிக்கல், பெரியார் நகர், சேடல்டேம் பகுதிகளிலும் மண் சரிவுகள் சரி செய்யப்பட்டு ஆங்காங்கே தடுப்பு சுவர்கள், மழைநீர் வடிகால் கள் கட்டப்பட்டு உள்ளன. 

ஆனால் சோலையாறு அணை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி மற்றும் பன்னிமேடு வழியாக வால்பாறை செல்லும் சாலையில் சோலையாறு அணை இடதுகரை பகுதி யில் சாலையில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. 

அந்த இடத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு மணல் மூட்டைகளை அடுக்கி சிவப்பு ரிப்பன் கட்டப்பட்ட நிலையில் பல நாட்களாக இருந்து வருகிறது. அங்கு இதுவரை பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை.   

சாலையில் உடைப்பு ஏற்பட்டு உள்ள பகுதியில் இருக்கும் பாலத்தின் அடியில் சாலை உடைந்து மண்சரிந்து கொண்டே வருகிறது. இதனால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டு விட்டது. எனவே பராமரிப்பு பணியை உடனே தொடங்காவிட்டால் சாலை முழுவதுமாக உடைந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

மேலும் சாலை துண்டிக்கப்பட்டால் சோலையாறு அணையில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் வழியாக வால்பாறைக்கும், கேரள மாநிலம் சாலக்குடிக்கும் செல்லும் போக்குவரத்து முற்றி லும் துண்டிக்கப்படும். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-S.ராஜேந்திரன்,

திவ்ய குமார் வால்பாறை.

Comments