தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம்! கவனமுடன் இருக்க வனத்துறையினர் வேண்டுகோள்! !

   -MMH 

  வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டது. வால்பாறை அருகில் உள்ள முடீஸ் வட்டார பகுதியில் ஆனைமுடி, தாய்முடி, பன்னிமேடு, நல்லமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகவும், தனித்தனியாகவும் முகாமிட்டு உள்ளது. 

இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த 2 காட்டு யானைகள் தாய்முடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்தது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் துரத்தினார்கள். இதையடுத்து அந்த யானைகள் வால்பாறை-முடீஸ் சாலையை கடந்து சோலையார் எஸ்டேட் சிறுவனச்சோலைக்குள் போய் பதுங்கியது. 

பின்னர் அந்த யானைகள் எஸ்டேட் வனச்சோலையை விட்டு வெளியே வந்து சோலையார் எஸ்டேட்-தாய்முடி எஸ்டேட்டுக்கும் இடைப்பட்ட தேயிலை தோட்டத்துக்குள் முகாமிட்டு நின்றது.

இருந்தபோதிலும் சோலையார் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் யானைகள் நின்ற இடத்திற்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானைகளை பார்த்து ரசித்துக் கொண்டே தேயிலை இலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டனர். 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால், தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் செல்ல வேண்டாம் என்றனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன், திவ்யா குமார் (வால்பாறை).

Comments