அச்சுறுத்தும் டெங்கு! பாதுகாப்பாக இருப்பதெப்படி?

     -MMH 

  மழை மற்றும் குளிர்காலத்தில், பருவகால நோய்களான டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவும் காலமாக இருகின்றன. இந்நேரங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உலக சுகாதார மையம் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

டெங்கு வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. பெண் கொசுக்களான ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் டெங்கு வைரஸை பரப்புகின்றன. ஒருவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு இருந்தால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இறப்பு ஏற்படும் அபாயம் கூட உள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, டெங்குவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், சரியான நேரத்தில் நோயறிதல் இல்லாமல் போவதால், டெங்கு வைரஸ் இறப்புக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது. ஆரம்பக் காலத்திலேயே நோயைக் கண்டறிந்தால், டெங்கு வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவாக மீளலாம்.

டெங்கு வைரஸில் இருந்து தப்பிப்பது எப்படி?

டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க, அதன் அறிகுறிகளை முதலில் தெரிந்திருக்க வேண்டும். டெங்கு வைரஸின் அறிகுறிகளை சரியாக தெரிந்து வைத்திருந்தால், ஆரம்ப கட்ட சிகிச்சையை விரைவாக மேற்கொண்டு நோயில் இருந்து தப்பிக்கலாம். கண் வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, தடிப்புகள், தலைவலி, அசாதாரண ரத்தப்போக்கு, மூட்டு வலி, சோர்வு உள்ளிட்டவை முக்கியமான அறிகுறிகள்.

தூய்மையான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறம் அவசியம்:

டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசு உற்பத்தி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, ஈரமான பகுதிகளில் கொசுகள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இதனால் வீட்டைச் சுற்றி மிகத் தூய்மையாகப் பராமரியுங்கள். வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி, வீடு விசாலமாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

உடைகள்:

சரியான உடைகளைத் தேர்வு செய்து அணியும்போது, கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். அதனால், எப்போது வெளியே சென்றாலும் உடலின் அனைத்து பாகங்களும் மூடிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கை, கால்கள் முழுவதும் மூடியிருக்க வேண்டும். பூச்சி விரட்டி ஸ்பிரே, லோஷன்கள், கொசு வலைகள் ஆகியவை கொசுக் கடியில் இருந்து பாதுகாப்பவை ஆகும்.

ஈரமான இடங்களைத் தவிர்த்தல்:

ஏற்கனவே கூறியதுபோல் ஈரமான இடங்களில் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். மேலும் பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளிட்டவை தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் இருக்கும். குறிப்பாக கழிவு நீர் பாதைகள், வடிகால்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். நீர் தேங்கும் அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்து நீர் தேங்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உரித்த தேங்காய் மட்டைகள், டயர் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி:

உடலில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், தொற்று நோய்களை எதிர்த்து போராடும் வலிமை இருக்கும். உடல் செயல்பாடுகளை அதிகரித்து, நாள் முழுவதும் நீர் சத்து குறையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

வைட்டமின்-சி, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. சிட்ரஸ் பழங்கள், அன்னாசி, பெர்ரி, கோழி, முட்டை, சாலமன் மற்றும் சூரை மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாம்.

- ராயல் ஹமீது.

Comments