கோவை வனப்பகுதியில் யானை தந்தங்கள் திருடிய மூவர்..!!

 

-MMH

   கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வன சரகத்துக்குட்பட்ட கரியன் படுகை வனப்பகுதியில் கடந்த 23-ந் தேதி ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை வன ஊழியர்கள் பார்த்தனர். அந்த யானையின் இரண்டு தந்தங்களும் திருட்டு போயிருந்தது. யாரோ யானையின் தந்தங்களை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் 2 நாட்களுக்கு பின்னர் தந்தங்களை திருடிய மர்மநபர்கள் யானை இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து விட்டு இதனை வனத்துறையினர் மீட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானையின் தந்தங்களை தாணி கண்டியை சேர்ந்த மருதுபாண்டி (வயது 27), ராமன்(50), சின்னான் (50) ஆகியோர் விற்பனை செய்வதற்காக திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீரை மற்றும் மூங்கில் குருத்து எடுக்க காட்டிற்குள் சென்ற போது இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்ததாகவும், சிக்கி விடுவோம் என்ற பயத்தில் மீண்டும் யானையின் தந்தங்களை வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தனர்.

பின்னர் வனத்துறையினர் 3 பேரையும் 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் பவானிசாகர் சப்-ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன். I. அனஸ்.

Comments