தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் குருபெயர்ச்சி விழா !

 

-MMH

       குரூ ஆண்டுக்கு ஒரு முறை ஒரு  வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு இடம் பயிற்சி செய்வது குருபெயர்ச்சி விழா என்று அழைக்கப்படுகிறது. குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 6.22 மணி அளவில்  இடப்பெயர்ச்சி ஆனார்  . அதனையொட்டி ஏராளமான சிவாலயங்களில் குரு பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம்  ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு உரிய கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் இக்கோவில் 98-வது தலமாகும். 

தேவர்களை ஆபத்தில் இருந்து காத்து அருள்புரிந்ததால் இக்கோவிலில் அருள்பாலித்து வரும் சிவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. அதேபோல அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த துயரங்களை போக்கியதால் இக்கோவில் விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என்று பெயர். இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தி ஆவார். விஸ்வாமித்திரர், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் வழிபட்ட தலமாகவும் இக்கோவில் உள்ளது. 

குரு ஸ்தலத்தில்  சிவாச்சாரியார்கள் தலைமையில்  மிக சிறப்பாக குருபெயர்ச்சி விழா நடந்தது.  ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஹரிஹரன், தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 

விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக 

-ராஜசேகரன். தஞ்சாவூர்.

Comments