யானைக்கும் அடி சறுக்கும்! வனத்தை விட்டு வெளியே வந்த காட்டு யானை சறுக்கி விழுந்து போராட்டம்!! வனத் துறையினர் மீட்பு!!

 -MMH

கோவையை அடுத்த  துடியலூர் கதிர்நாயக்கன் பாளையம்  வனப்பகுதிக்குள் மழை காரணமாக ஆங்காங்கே குழிபோன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பல இடங்களில் சேறும், சகதியுமாக மாறி காணப்படுகிறது. 

இந்த நிலையில் அந்த பகுதியில் இரை தேடி வந்த இளம் வயது ஆண் காட்டுயானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது. போராடி பார்த்தும் அதனால் எழும்ப முடியவில்லை. இதனால் பலத்த சத்தம்போட தொடங்கியது.

 இதனை அறிந்த  பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை களப் பணியாளர்கள் உடனடியாக சென்று அந்த யானையை மீட்டனர். கீழே விழுந்த அதிர்ச்சியில் சோர்வாக காணப்பட்ட அந்த யானைக்கு முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். 

பின்னர் அந்த யானை அங்கிருந்து தானாக நடந்து புதர்ப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனை களப்பணியாளர்கள் தொலைவில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments