நோயாளியின் உயிர்தான் முக்கியம்! போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சாமர்த்தியம்! குவியும் பாராட்டு..!!

 

-MMH

       விபத்தில் சிக்கிய நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலால் அவரச தேவைக்காக சாலையின் தடுப்புச்சுவரை கடந்து சென்று நோயாளியின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

புதுச்சேரி – கடலூர் சாலையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் படுகாயமடைந்த ஒரு நபருக்கு அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்பின்பு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பரிந்துரைக்கப்பட்டது.


   நோயாளியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 100 அடி சாலையில் இந்திரா சதுக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் நடுவழியில் சிக்கிக்கொண்டது.

இந்த போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்சும் சிக்கிக்கொண்டது. ஆம்புலன்சில் இருப்பவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தாகவேண்டிய நிலையில், அதன் ஓட்டுனர் மேம்பால சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பில் ஏறி மறுபக்கம் வழியாக செல்லத் திட்டமிட்டார்.

அதற்காக அங்கிருந்தவர்கள் தடுப்புச்சுவர் மீது ஆம்புலன்ஸ் சக்கரம் ஏறும் வகையில் சிறிய கற்களை தடுப்புச்சுவரை ஒட்டியவாறு வைத்தனர். அதன் மீது ஆம்புலன்சை ஏற்றிய ஓட்டுனர் லாவகமாக மறுபக்கம் கடந்து நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பின்னர் காயமடைந்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

உயிருக்கு போராடும் நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சமயோசிதமாகச் செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டதன் காரணமாக, சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- பாரூக்.

Comments