பாதி வழியில் பேருந்திலிருந்து இறக்கி விட்டதில் மன உளைச்சல்! பயணிக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு! 11 ஆண்டுக்கு பிறகு கிடைத்த நீதி!

   -MMH 

   செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், பாவேந்தர் சாலையை சேர்ந்தவர் உமாபதி(45). இவர், கும்பகோணத்திலிருந்து, சென்னைக்கு தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் கடந்த 2010ல், 113 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணம் செய்தார். 

"பயணவழியில் விக்கிரவாண்டி அருகே, பனையபுரம் என்ற இடத்தில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அதன்பின், நான் பேருந்திற்குச் சென்றபோது, பேருந்து அங்கிருந்து சென்றிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால், 1 லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன், 5,000 ரூபாய் வழக்குச் செலவும் வழங்க வேண்டும்" என, சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2010ல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் போக்குவரத்துக்கழகம், ஓட்டுனர், நடத்துனர் சேவையில் குறைபாடுள்ளது. பயணிக்கு, 1லட்சம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்குச் செலவும் வழங்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது வழக்கு விசாரணையில், 'பயணிக்காக, 20 நிமிடங்களுக்கு மேல் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தும், அவர் வரவில்லை. இதன்பின்னரே பஸ் சென்னைக்கு புறப்பட்டது. பயணியின் கவனக்குறைவே பயண தடைக்கு காரணம்' எனத் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்ய போக்குவரத்து கழகம் கோரியது. 

கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா, 'சூழ்நிலைகளை கருத்தில் வைத்து, புகார்தாரருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகமானது. எனவே, இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்குச் செலவுக்காக 5,000 ரூபாய் விரைவு போக்குவரத்து கழகம், ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் சேர்ந்து, பயணிக்கு வழங்க வேண்டுமென' தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தார்.

11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- ராயல் ஹமீது.

Comments