வால்பாறையில் 10-வது நாளாக காட்டு யானைகள் முகாம்!! - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

   -MMH 

   வால்பாறையில் 10-வது நாளாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் நல்லமுடி பூஞ்சோலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். 

வால்பாறையில் முடீஸ் வட்டார பகுதியில் உள்ள தாய்முடி, ஆனைமுடி, நல்லமுடி, முக்கோட்டுமுடி ஆகிய எஸ்டேட் பகுதியில் பட்டப்பகலிலும் அதிகாலை மற்றும் இரவிலும் காட்டு யானைகள் கூட்டம் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தேயிலை தோட்ட பகுதியில் பட்டபகலிலேய முகாமிட்டு நின்று வருவதால் தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வால்பாறையில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் 10-வது நாளாக காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு வருகிறது. 

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதித்துள்ளனர். இதனால் வால்பாறைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வால்பாறையில் குளிர் பனிக்காலம் தொடங்கி விட்டதால் ஆறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது. 

இதனால் வால்பாறையின் மற்றொரு முக்கிய சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அங்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் போய்விட்டது. இதனால் நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவில்ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் முகாமிட்டு நிற்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடைவிதித்துள்ளதால் அவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன், 

திவ்யகுமார் வால்பாறை

Comments