ஓசூரில் புதிய விமான நிலையம் அதிகார பூர்வ அறிவிப்பு!!

   -MMH 

   மாநிலத்தில் தொழில் வளர்ச்சி கண்டால் மட்டுமே வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநில வருவாய் உயரும். இதன் அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ முடியும்.

அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் தான் இருக்கிறது. இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியது மாநில அரசின் கடமை. மிக முக்கியமான தொழில் நகரமாக சென்னை திகழ்கிரது. ஆனால் சென்னை மட்டுமே முன்னேறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறாது.

அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடைய பல திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் முதன்மையான இடம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூருக்கு உண்டு. கர்நாடகா மாநில பார்டரில் இருக்கும் இந்த மாவட்டம், பெங்களூருவுக்கு மிக அருகில் உள்ளது. பெரும்பாலான தொழில் துறைகள் பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்களை இழுக்க ஒரே வழி ஓசூரை பெங்களூருவுக்கு நிகராக மாற்ற வேண்டும். அதன் பொருட்டு சில ஆண்டுகளாகவே ஓசூரில் தொழில் தொடங்குவதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் விமான நிலையம் அமைக்க 2017ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மத்திய விமான போக்குவரத்து துறையிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இது உள்நாட்டு விமான நிலையமாக செயல்படவிருக்கிறது. தற்போது அமைந்துள்ள புதிய திமுக அரசு தொழில் துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) மூலம் டெண்டர் கோரியுள்ளது. விமான நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனங்கள், இடங்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.இதன்பின் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, இடங்களை இறுதி செய்த பின் கட்டுமானம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- Ln இந்திரா தேவி முருகேசன் / சோலை ஜெயக்குமார்.

Comments