டிக்கெட் எடுக்கச் சொன்னதால் ஆத்திரம்! அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய காவலர்!

    அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற்கு, டிக்கெட் எடுக்கச் சொன்னதால் ஆத்திரமடைந்த காவலர், நடத்துனரை தாக்கினார். இதனால், போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி செங்கல்பட்டில் பரபரப்பு நிலவியது. 

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாமல்லபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துனராக, முருகேசன் (55) என்பவர் பணியாற்றுகிறார். நேற்று காலை முருகேசன் பணியிலிருந்தார். அப்போது, பேருந்திலிருந்த பயணிகள் அனைவருக்கும்  டிக்கெட் கொடுத்துவிட்டு, இறுதியாக ஒருவரிடம், டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவர், நான் போலீஸ்காரர். டிக்கெட் எடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். உடனே முருகேசன், நீங்கள் சீருடை இல்லாமல் இருக்கிறீர்கள். அதனால், வாரண்ட் காப்பி அல்லது  அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பயணி, என்னிடம் வாரண்ட் காப்பி கிடையாது. அடையாள அட்டையை காண்பிக்க முடியாது என, மிரட்டலாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து முருகேசன், நீங்கள் பயணம் செய்ய முடியாது. கீழே இறங்குங்கள் எனக் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த அப்பயணி,  நடத்துனரை  சரமாரியாக தாக்கத் துவங்கினார். 

உடனே, அங்கிருந்த பொதுமக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி அறிந்ததும், சக அரசுப் பேருந்து நடத்துனர்களும், ஓட்டுனர்களும் ஆங்காங்கே பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து பேருந்துகளையும் இயக்காமல் நிறுத்திவிட்டு, அந்தப் பயணியை முற்றுகையிட்டு, தகராறில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, செங்கல்பட்டு நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பயணியிடம் விசாரித்தனர். அதில், அவர் ஹரிதாஸ் என்பதும், மாமல்லபுரம் காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றுவதும் தெரிந்தது. இதையடுத்து காவல்துறையினர், ஹரிதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், நடத்துனர் முருகேசிடம், மன்னிப்பும் கேட்க வைத்தனர். அதைத் தொடர்ந்து, அனைவரும் பேருந்துகளை இயக்குவதற்காக கலைந்து சென்றனர்.

-ராயல் ஹமீது.

Comments