மேலூரில் கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொன்ற மனைவி!

   -MMH 

   மதுரை மேலுர் அருகே கணவன் தலையில் அம்மி கல்லை தூக்கிபோட்டு கொடூரமாக மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி தெற்குவளவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக உள்ளார். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு விஜயதர்ஷினி, விஜயராமன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மேலூர் அருகே எம்.மலம்பட்டியில் சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். 

மணிகண்டன் குடிபோதையில் வந்து அடிக்கடி மனைவி ஷீலாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மணிகண்டன் இறைச்சி வாங்கி வந்து ஷீலாவிடம் கொடுத்து சமைக்கச் சொல்லியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அவர், மனைவியுடன் கடும் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஷீலா, வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டுள்ளார், இதில் தலை முற்றிலும் சிதைந்து சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஷீலா வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து மேலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்தவுடன் மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொலை குறித்த தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பும் இருந்துள்ளது. மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால் இதனை மணிகண்டன் காதில் வாங்கி கொள்ளவில்லை. இதனாலும் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு முற்றியுள்ளது.

சம்பவத்தன்றும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறுதான் கொலையில் முடிந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

தப்பியோடிய ஷீலாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல் கைப்பற்றப்பட்டது. கணவனை கொலை செய்து விட்டு அவரே காவல்துறைக்கு போன் செய்து தகவல் சொன்னது மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- ராயல் ஹமீது.

Comments