காட்டு யானைகளின் தொடர் தாக்குதலால் நிம்மதி இழந்து தவிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள்!

    -MMH 

    வால்பாறையில் கடந்த 2 மாதமாக காட்டு யானைகள் நடமாட்டம் தமிழக- கேரள எல்லை எஸ்டேட் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதனால் ரேஷன் கடை, பள்ளி வளாகங்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், குடியிருப்புகள், எஸ்டேட் அலுவலகங்கள் சேதமடைகின்றன. சுற்றுலா தலங்களிலும் காட்டு யானைகள் நின்று வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வனத்துறையினருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களில் சின்கோனா எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்தின.  நேற்றும் 2 யானைகள் சேக்கல்முடி எஸ்டேட் செல்லும் வழியில் அமைந்துள்ள சோலையாறு மின்நிலையத்தின் (2) வளாகத்திற்குள் புகுந்து நுழைவு வாயிலை உடைத்து சேதப்படுத்தின.

பின்னர் நுழைவு வாயிலின் அருகிலிருந்த தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தின் கதவு,ஜன்னலை உடைத்து சேதப்படுத்தின.இதேபோல் சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து வீட்டுக்குள்ளிருந்த சமையல் பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவைகளை வெளியே வீசியெறிந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. 

தொடர்ந்து காட்டு யானைகள் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதிகளான சின்னக்கல்லார், பெரியகல்லார், சேக்கல்முடி, பன்னிமேடு மற்றும் முடீஸ் பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு நின்று வருவதால் எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அச்சத்திலும் பீதியிலும் இருந்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன்,

திவ்ய குமார் (வால்பாறை),

செந்தில்குமார் (மூடீஸ் ).

Comments