விமானம் ஏறும்போது நெகட்டிவ்! இறங்கும்போது பாசிட்டிவ்! ஒரே விமானத்தில் வந்த 179பேரில் 125 பேருக்கு கொரோனா!

   -MMH 

   இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், கேரளா, குஜராத் என பல மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்சரஸ் நகரத்துக்கு நேற்று பிற்பகலில் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த விமானம், 19 குழந்தைகள் உள்பட 179 பயணிகளுடன் இத்தாலியின் மிலன் நகரிலிருந்து புறப்பட்டு, அமிர்தசரஸ் நகரில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தரையிறங்கியது.

கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என ஏற்கெனவே ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, இ்த்தாலியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, தொற்று உறுதியான பயணிகள், 'இத்தாலியில் புறப்படும்போது, தங்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது, இந்தியா வந்ததும் எவ்வாறு பாசிட்டிவ் வந்தது?' என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தொடர்ந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ராயல் ஹமீது.

Comments