தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த 3 வயது சிறுவன்... கொலையா? என போலீசார் விசாரணை!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கிரானைட் அதிபர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ. கிரானைட் அதிபர். இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் சிங் (26) என்பவர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் தங்கியிருந்து தொழிலாளி ஆக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ரமேஷ் சிங்கின், இரண்டாவது மகனான 3 வயது சிறுவன் ரோஷன், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சிறுவன் மாயமாகி உள்ளான். இதனால், உறவினர்கள் அவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, கிரானைட் அதிபர் வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் மூழ்கிய நிலையில் கிடந்தான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ரோஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த தக்கலை போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரமேஷ் சிங் அளித்த புகாரின் பேரில், தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து , சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-துல்கர்னி உடுமலை.
Comments