போக்சோ சட்டத்தை கையாள்வது குறித்து பெண் போலீசாருக்கு பயிற்சி !!

 

-MMH

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் போக்சோ சட்டத்தை கையாள்வது குறித்த மேற்கு மண்டலத்தில் கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து மகளிர் போலீசாருக்கு நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சி முகாமை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தொடங்கி வைத்து  பேசும்போது, போக்சோ சட்டம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தர போலீசார் முழு முயற்சி எடுக்க வேண்டும்.  சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவங்களை குறைக்க முடியும் என்றார்.

இதில் கோவை சரக டி.ஜ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ், டாக்டர் மல்லிகை செல்வராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில் போக்சோ சட்டத்தில் உள்ள உட்பிரிவுகள் குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு போதிய கவுன்சிலிங், தேவையான சட்ட உதவிகள், உரிமைகள் குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்.

-சி.ராஜேந்திரன்.

Comments