அவசர காலத்தில் பொதுமக்களை தங்க வைக்க கட்டிடங்கள் தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு!!

   -MMH 

   மலைப்பிரதேசமான வால்பாறையில் பருவமழை நன்றாக பெய்தது. இதனால் மழைக்காலத்தில் இங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அத்துடன் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்படுவது வழக்கம்.

இதனால் மழைக்காலத்தில் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே குடியிருந்து வரும் பொதுமக்கள் மீட்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். 

எனவே அவசர காலத்தில் பயன்படுத்த வால்பாறையில் கட்டிடங்கள் உள்ளதா, அந்த கட்டிடங்கள் தரமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி தாசில்தார் குமார் தலைமையில் நடந்தது. 

இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க உகந்த கட்டிடங்கள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.                    

இது குறித்து தாசில்தார் குமார் அவர்கள் கூறியதாவது:- 

"மழை போன்ற பேரிடர் ஏற்படும் நேரத்தில் ஆற்றோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதற்காக வால்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், தனியார் திருமண மண்டபங்கள், அரசு தங்கும் விடுதிகள் ஆகியவை எந்த தரத்தில் உள்ளது, அவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாமா என்பதை ஆய்வு செய்ய பேரிடர் மேலாண்மை இயக்குனரகம் உத்தரவிட்டது. 

அதன்படி ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பான அறிக்கை விரைவில் அனுப்பி வைக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments