ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை! மாநகராட்சி நிர்வாகம் திட்டம்!!!

 

-MMH

    கோவை குளங்களில் நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கென, பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க, 'கான்ட்ராக்டர்'களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து, ரூ.490 கோடியும், மாநில அரசிடம், ரூ.500 கோடியும் என, ரூ.990 கோடி பெறப்பட்டுள்ளது. இதில், 978.73 கோடிக்கு, 56 பணிகள் திட்டமிடப்பட்டு தற்போது, 32 பணிகள், ரூ.241.05 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு உள்ளன.

தற்போது நடந்து வரும், 14 பணிகளுக்கு, ரூ.478.17 கோடி செலவிடப்பட்டுள்ளது. தவிர, ரூ.16.47 கோடி மதிப்பீட்டில், 10 புதிய பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், மாநகராட்சி வசம் இருக்கும் குளக்கரைகள் டைல்ஸ் பதித்தல், சைக்கிளிங் தளம் என பல்வேறு அம்சங்களுடன், அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை, பயோமைனிங் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. சமீபத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் கமிஷன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஒரு ஆண்டில் மட்டும், ரூ.120 கோடி செலவு செய்துள்ளோம். குளக்கரைகளில் கான்கிரீட் போடக்கூடாது என்ற கருத்து வந்ததையடுத்து, சில மாறுதல்களும் செய்துள்ளோம். வாலாங்குளத்தின் வட பகுதியில், 100 பேரும், பெரியகுளத்தில், 60 பேரும் வேலை செய்கின்றனர்.

கான்ட்ராக்டரிடம் வேலை ஆட்களைஅதிகரித்து பணிகளை வேகப்படுத்த சொல்லி இருக்கிறோம். செல்வசிந்தாமணி குளத்தில் கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டன.மற்ற குளங்களையும் மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதரசில பணிகளுக்கு மார்ச், 31ம் தேதிதான் பணி ஆர்டர் கொடுத்துள்ளோம். அதில், போட்டிங், மூவி ஆன் வாட்டர், எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் உள்ளிட்ட பணிகள் அடங்கும். இப்பணிகள் அடுத்தாண்டுக்குள் முடிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்  

-சி.ராஜேந்திரன்.

Comments