பொள்ளாச்சி உடுமலை சாலையில் செடி நட்டு வைத்த ஆட்டோ ஓட்டுநர்..!!

   -MMH 

   பொள்ளாச்சி - உடுமலை சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகின்ற நிலையில், சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மதுரை, பழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுதான்.

 மேலும் கேரளா, கோவை செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உடுமலை ரோட்டில் மரப் பேட்டை பகுதியில் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்சமயம் உடைப்பு அதிகமாகி ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலும் தண்ணீர் தேங்கி ரோட்டில் சேதமடைந்ததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சேதமடைந்த ரோட்டில் செடிகளை பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் நட்டுவைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது, குழாயில் சிறியதாக கசிவு இருக்கும்போதே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தற்போது கசிவு பெரியதாகி அதிகமான தண்ணீர் வீணாகிறது. 

இதனால் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் பைக்கில் வந்த ஒரு பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். எனவே விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப் போகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்

பொள்ளாச்சி.

Comments