மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு!!

   -MMH 

    பள்ளி பருவத்தில் பாடி திரிந்த பறவைகளான கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 31-வது ஆண்டில் 2-வது சந்திப்பு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் நடத்தினர். 

கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இந்தப்பள்ளி வளாகம் தற்போது புதிய கட்டிடத்தில் மதுக்கரை வட்டாட்சியர்  அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

30 வருடத்திற்கு முன்பு பள்ளியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில் இருந்த மைதானத்தில்  தற்போது புதிய மாடி கட்டிடம் கட்டப்பட்டு அங்கு தற்போது அரசு பள்ளி இடம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. கடந்த 1990-91 ஆம் ஆண்டுகளில் 10 ம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் 30 வது ஆண்டான 17-1-2021 ல் முதல் சந்திப்பு நிகழ்ச்சியை கொரோனா இடர்ப்பாட்டுக்கு இடையிலும் நடத்தினர்.

கோவை மதுக்கரை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 30 வது ஆண்டின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி.

இந்த 30-வது ஆண்டின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிர்ப்புறம் உள்ள டி.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. முதல் நிகழ்வாக கேக் வெட்டி மகிழ்ச்சியை அனைவரும் இனிப்பாக கொண்டாடினர். 

இந்த சந்திப்பு நிகழ்வில் அப்போதைய பாட்டு டீச்சர் மகனும், முன்னாள் மாணவருமான ரவிச்சந்திரன் பங்கேற்று திருப்பாவை-மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவாய் என்னும் பாடலை பாடி பழைய பள்ளிக்கால நினைவுகளை கண் முன்பு கொண்டு வந்தார். இதையடுத்து இசை நாற்காலி போட்டி நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரமேஷ்பாபு, தர்மராஜ், நிர்மலா, கிருஷ்ணகுமார், மகாதேவன் ஒருங்கிணைத்து நடத்தினர்.


29-5-2022 ல், 31வது ஆண்டில் இரண்டாவது சந்திப்பு நிகழ்ச்சி கோவை குரும்பபாளையம் பிரிவில் முன்னாள் மாணவர் லோகநாதன் இல்ல வளாக பந்தலில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் ரமேஷ்பாபு, தர்மராஜ், நிர்மலா, கிருஷ்ணகுமார், சக்திவேல், வெங்கடேஷ் ஒருங்கிணைத்து நடத்தினர். கேக் வெட்டி அனைவரும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். நடிகர்கள் நம்பியார், வீரப்பா, பாலையா, சிவாஜி கணேசன், ரகுவரன், சத்தியராஜ் மற்றும் கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பிரபலங்கள் குரல்களில் மதுக்கரை மிமிக்ரி கணேஷ் பேசி அசத்தினார்.

முன்னாள் மாணவியும், தற்போது கோவை மாவட்டம், பேரூர் காவல்நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் வசந்தி, பத்திரிக்கையாளர் பூபதி உள்பட முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். மதுக்கரை மின்சார வாரியத்தில் பணியாற்றும் முன்னாள் மாணவர் புஷ்பராஜ் மற்றும் பத்திரிக்கையாளரும் ஊடகவியலாளருமான ஆர்.கே.பூபதி ஆகியோர் பள்ளி ஆண்டு விழாவில் அரசியல்வாதி - நிருபர் என மேடையில் அரங்கேற்றம் செய்த நாடகம் மாறுவேடப் போட்டி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தற்போது ஆசிரியர் பணியில் உள்ள முன்னாள் மாணவர் முருகேசன், குறத்தி வேடமிட்டு முதல் பரிசு பெற்றதை நினைவு கூர்ந்தனர்.


2-வது சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள் தனித்தனி குழு புகைப்படம்

மேலும் துபாய் நாட்டில் பணிபுரியும் முன்னாள் மாணவர் மகாதேவன் மகாதேவன்,  அமெரிக்காவில் பணிபுரியும் முன்னாள் மாணவர் டேனியல் பிரான்சிஸ் மற்றும் நவுசாத் ஆகியோர் வீடியோ கால் மூலம் நினைவுகளை பகிர்ந்தனர். இந்நிகழ்வில் மாணவர் பருவத்தில் தாங்கள் பழகிய மறக்க முடியாத நிகழ்வுகள், ஆசிரியர்கள் அப்போது தந்த அறிவுரைகள், தங்கள் தற்போதைய தொழில், குடும்பம், பணி உள்ளிட்ட விவரங்களை மேடையில் பரிமாறி அறிமுகப்படுத்தி கொண்டனர். 

புகைப்பட ஒருங்கிணப்பு ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும் மதுக்கரை மார்க்கெட் அம்மன் ஸ்டுடியோ உரிமையாளருமான நந்தகுமார் முன்னின்று கவனித்தார். வரவு-செல்வு அறிக்கையை நிர்மலா வாசித்தார். பேனர் ஏற்பாடு செய்த கிருஷ்ணகுமாருக்கும், நிகழ்ச்சிக்கு இடம் அளித்த லோகநாதனுக்கும் நன்றியும் பள்ளி முன்னாள் மாணவி கீதா, தற்போது தான் படித்த மதுக்கரை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருவதற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.  


கோவை மதுக்கரை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 31 வது ஆண்டின் 2 வது சந்திப்பு நிகழ்ச்சி.

1990-91 ஆம் ஆண்டில் 10 ம் வகுப்பு ஏ பிரிவு முதல் ஈ பிரிவு வரை படித்த மாணவ-மாணவயர்களில் 118 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர் எனவும், மீதம் உள்ள நண்பர்களையும் விரைவாக கண்டறிந்து குழுவில் இணைக்க வேண்டும்; பள்ளியின் நலனுக்கு தனியாக நிதி திரட்டி அளிப்பது, கடந்த முறை பங்கேற்று இந்த முறை விடுபட்டவர்கள் இணைப்பது; அடுத்த முறை ஆசிரியர், ஆசிரியைகளை அழைத்து கவுரவிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இறுதியாண்டு, இறுதி நாளில் தோழமையை நினைவுகூறும் வகையில் பள்ளி, கல்லூரி மேடைகளில் இசைக்கப்படும் சினிமா பாடல்களான முஸ்தபா முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா, பாடித்திரிந்த பறவைகளே, பசுமை நிறைந்த நினைவுகளே ஆகிய முதல் வரிகளை நினைவூட்டும் வகையில் அமைந்தது, கோவை மதுக்கரை அரசினர் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்களின் இந்த சந்திப்பு நிகழ்ச்சி..!!

-பத்திரிக்கையாளன், ஊடகவியலாளன் ஆர்.கே,பூபதி

Comments