எல். ஐ.சி முகவர் சங்கம் போத்தனூர் கிளை சார்பில் முப்பெரும் விழா!!
இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சம்மேளனம் சார்பில் முகவர் சங்கம் போத்தனூர் கிளை சார்பில் முப்பெரும் விழா கோவை அண்ணா சிலை அருகே உள்ள ஆருத்ரா ஹாலில் இன்று காலை நடைபெற்றது. வெள்ளி விழா ஆண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், வெள்ளி விழா முகவர்களுக்கு பாராட்டு விழா, புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ராமலிங்கம் வரவேற்பு உரை ஆற்றினார். துணைத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார்.
கோவை கோட்ட துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். கிளை பொருளாளர் சுப்பிரமணியம் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். போத்தனூர் கிளை மேலாளர் ரவிசங்கர், உதவி கிளை மேலாளர் ஜின்ஸி, கோவை கோட்ட துணைத் தலைவர் ராமசாமி, கோட்ட செயலாளர் ராமச்சந்திரன், கோட்ட பொருளாளர் சந்திரசேகர், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கோவை கோட்ட தலைவர் குமணன் 25 ஆண்டுகள் பணியாற்றிய முகவர்களுக்கு முகவர் திலகம் விருது வழங்கிய சிறப்புரை ஆற்றினார். கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர் சக்கரவர்த்தி ராஜு, தென் மண்டல தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 1ம் தேதி நவம்பர் 31ம் தேதி வரை போராட்டம் நடத்துவது, பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி தருதல், முகவர்களுக்கு குழு காப்பீட்டு தொகையை அதிகப்படுத்தி தருதல், குழு காப்பீட்டிற்கு வயது வரம்பு வரம்பை அதிகப்படுத்துதல், முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிளைச் செயலாளர் ராஜேஷ் பாபு நன்றி உரையாற்றினார்.
- சீனி,போத்தனூர்.
Comments