சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பறந்த ஆதரவற்ற 26 குழந்தைகள்!!

 

-MMH

தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது.

அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக அமைப்பானது, தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள்,

இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இதில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும், ஒரு திருநங்கை மாணவியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ, மாணவிகளை கோவை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் கோவை அறிவியல் மையம், ஜி. டி நாயுடு அருங்காட்சியகம் மற்றும் உக்கடம் குளக்கரையில் உள்ள ஐ லவ் கோவை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் இரவு மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் அழைத்து செல்லப்பட உள்ளனர். 

இதுகுறித்து விமானத்தில் வந்த மாற்றுத்திறனாளி மாணவர் மோகன்(வயது 30) கூறியதாவது: -

நான் பி. ஏ, பி. எட் படித்துள்ளேன். முதல் முறையாக இன்று விமானத்தில் பயணம் செய்தேன். விமானத்தில் பயணம் செய்ய உள்ளேன் என்பதை தெரிந்து கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் என்னுடன் 26 மாணவர்கள் இருந்ததால் தைரியம் ஏற்பட்டது. இன்று கோவையை சுற்றி பார்த்தோம். எனக்கு கண் பார்வை இல்லாததால் எனது நண்பர்களிடம் சுற்றி பார்க்கும் இடங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். 

திருநங்கை மாணவி மோனிகா (18) கூறும்போது, விமானத்தில்

பயணம் செய்யும்போது கொஞ்சம் பயமாக தான் இருந்தது. சென்னையில் இருந்து புறப்படும்போதும், கோவையில் தரையிறங்கும் போதும் பயம் ஏற்பட்டது. அதன் பின்னர் விமானத்தில் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடன் திரை பிரபலங்களும் பயணம் செய்தனர். அவர்கள் எங்களுடன் விமானத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு வந்தனர் என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments