உலக காசநோய் தின விழிப்புணர்வு முகாம் ஆட்சியர் துவக்கி வைத்தார்!!!

-MMH

தூத்துக்குடியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர்  துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி   மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், நேற்று   துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், காசநோய் அறிகுறிகளை கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை பார்வையிட்டார், பின்னர்  காசநோய் விழிப்புணர்வு தபால்தலையினை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து  அனைத்து அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், காசநோயை அறவே ஒழித்து, காசநோய் இல்லா உலகை உருவாக்க, இந்தியக் குடிமகனாகிய நான் பாடுபடுவேன். என் குடும்பம் மற்றும் ஊரில் யாருக்காவது இருமல், காய்ச்சல், எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால்கூட அவர்களுக்கு காசநோய் பற்றி எடுத்துச்சொல்லி மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன். 

காசநோய், கிருமியால் வரக்கூடிய ஒரு தொற்று நோய் என்பதால், காசநோயாளிகளை துச்சமாக எண்ணமாட்டேன். மற்றவர்களையும் எண்ணவிடமாட்டேன். காசநோயாளிகளை ஒதுக்கி வைக்காமல் அன்புடன் அரவணைத்து ஆறுதல் அளிப்பேன். காசநோய் ஒழிப்பில், என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு, காசநோயை முற்றிலும் ஒழித்திடவும், ‘காசநோய் இல்லா தமிழகம்” என்ற இலக்கினை 2025க்குள் அடையவும் பாடுபடுவேன் என்ற உலக காசநோய் ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

முகாமில் தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசம்) சுந்தரலிங்கம், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், தூத்துக்குடி இணை இயக்குநர் நலப்பணிகள் கற்பகம், தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பொற்செல்வன், தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) யமுனா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ம.செந்தில்குமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக. 

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments