வெடிபொருள் பயன்படுத்த பொதுமக்கள் எதிா்ப்பு!!

      -MMH


      வெடிபொருள் பயன்படுத்த பொதுமக்கள் எதிா்ப்பு..
அத்திக்கடவு திட்டத்துக்கு குழாய் பதிப்பதற்கு வெடிபொருள் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து அவிநாசியில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட மடத்துப்பாளையம் விநோபா காலனி பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி நீா் செறிவூட்டும் திட்டப் பணிக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி பாறை நிலமாக உள்ளதால், வெடிப் பொருள் பயன்படுத்தி பாறைகளை தகா்க்கும் பணிகளை மேற்கொண்டனா்.
      இந்நிலையில் குடியிருப்புப் பகுதியில், முன் அறிவிப்பின்றி வெடிபொருள் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல மீண்டும் பாறைகளை தகா்த்து, குழி தோண்டுவதற்காக பொக்கலைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதையறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த திட்டப் பணி அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இனி குடியிருப்புகளின் அருகே வெடி பொருள்களை பயன்படுத்தி, பாறைகளை அகற்றுவதில்லை என உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.


-அருண்குமார் ,கோவை மேற்கு.


Comments