28 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

 

-MMH

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்தவர் வேலாயுதபெருமாள்(66). இவர் கடந்த 1990ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (20) என்பவரது தங்கையை (அப்போது அவருக்கு வயது 18) கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட சாமுவேலை பேனா கத்தியால் குத்தி வேலாயுதபெருமாள் கொலை செய்துள்ளார். மேலும் தடுக்கச் சென்ற சாமுவேலின் தாயார் முனியம்மாளையும் தாக்கியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வேலாயுதபெருமாளை கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் 1991ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த வேலாயுதபெருமாள் தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்த வழக்கானது புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி நீதிமன்றாம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்தது. ஆனாலும், வேலாயுதபெருமாள் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாகவே இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேலாயுதபெருமாளை 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு கோட்டைப்பட்டினம் காவல்துறை ஆய்வாளராக பணியில் சேர்ந்த ந.முத்துக்குமார் பணியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் வேலாயுதபெருமாளை பிடித்தார் என்பது கவனிக்கத்தக்கது. ந.முத்துகுமார் தற்போது திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் மாலிக், குற்றவாளி வேலாயுதபெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், மூன்றாயிரம் ரூபாய்‌ அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத கால சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேலாயுதபெருமாளை மடக்கி பிடித்து, இந்திய அளவில் தமிழக காவல்துறையினை கம்பீரப்படுத்தி மேலும் ஒரு கிரீடம் வைக்க உதவிய காவல் ஆய்வாளர் முத்துக்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments