அரசு ஊழியர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாவு மணி சங்கு ஊதி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
9-வது நாளாக அரசு ஊழியர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாவு மணி சங்கு ஊதி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு சாவுமணி சங்கோதி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழகத்தில் நான்கரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.50 லட்சம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதிசேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அளித்த குற்ற குறிப்பாணைகளை ரத்துசெய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
- சீனி,போத்தனூர்.
Comments