ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு! காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்!!

      -MMH
     ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்களது தூத்துக்குடி ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து, இலவசமாக வழங்குவதாகத் தெரிவித்ததோடு, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஆனால் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்றவை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டிலும் முக்கிய கட்சிகள் நிபந்தனையுடன், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று (ஏப். 28) தமிழக மக்கள் மன்றம் சார்பில் அதன் தலைவரும், மக்கள் நீதி மன்றத்தின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ச.மீ.இராசகுமார் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், அங்கு கொல்லப்பட்ட 14 பேரினைக் கொன்றவர்கள் யாரென்று கேள்வி கேட்காதது  ஏன்?" என்றும், "அவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்று கேள்வி கேட்காதது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், "சில கட்சிகளை மட்டும் அழைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட முடிவு ஒருதலைபட்சமானது" என்றும், "எங்கோ சிலரது உயிரின் பெயரால் ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது" என்றும், "இந்த ஆக்சிசன் தேவைக்கு பல மாற்று வழிகளும், பல மாற்று நிறுவனங்களும் இருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிப்பு என்பது ஒரு நாடகமாக இருக்குமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது" என்றும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

"ஏற்கனவே தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் மிரட்டலாகவும், கடைசியில் 14 பேரை படுகொலை செய்து அதற்கு நீதி கிடைக்காமலும் இருக்கும் நிலையில் இந்த ஆலையை எக்காரணத்திற்காகவும் திறக்கக்கூடாது" என்று, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ச.மீ.இராசகுமார் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி, தமிழ் தேச மக்கள் கட்சி, பச்சைத்தமிழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழ் தேசிய கலை இலக்கிய பண்பாட்டு கழகம், தமிழிய சிந்தனைக்களம் போன்ற அமைப்புகள் கலந்துகொண்டன.

- சங்கர், தேவகோட்டை. 

Comments