இந்தியாவின் முதல் 3டி வீடு.! ஐ.ஐ.டி மெட்ராஸ் புதிய சாதனை.!

 

-MMH

    இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஒரு சில தொழில்நுட்பங்கள் நமது தேவையை விரைவில் முடித்துதரும் தன்மையை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முதல் 3டி வீடு 'டுவாஸ்டா' ஐ.ஐ.டி மெட்ராஸ் ஸ்டார்ட் அப்-ஆல் அதே வளாகத்தில் கட்டப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 3டி வீடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதன்படி 600 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில் ஒரு ஹால், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு சமையலறை உள்ளது. குறிப்பாக இந்த வீடு முழுவதும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கான்கிரீட் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு வீடு கட்டுவதற்கு ஐந்து மாதங்கள் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐந்து நாட்களில் ஒரு புதிய வீட்டை கட்டலாம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த 3டி பிரின்டிங் தொழில்நுட்ப முறை நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தும்.

மேலும் இந்த புதிய முறையில் கான்கிரீட்டின் பச்சை தன்மை, வழக்கமான முறையில் 21 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் காய்வதை விட சீக்கிரமே ஒரு சில நிமிடங்களில் காய்ந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் நிஜ வாழ்க்கை கட்டமைப்புகளை உருவாக்க தானியங்கி உற்பத்தி முறைகளை பயன்படுத்தி கட்டுமானத்தை டிஜிட்டல் மயமாக்குகிறது. பின்பு ஒரு கான்கிரீட் 3டி அச்சுப்பொறியை பயன்படுத்துகிறது. இதன்காரணமாக வீட்டின் விலை சுமார் 30 சதவிகிதம் குறையும் என்றும், பின்பு கட்டிடத்தின் ஆயுள் 50 ஆண்டுகளை தாண்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நாம் நினைத்த வீட்டை அப்படியே கட்ட உதவி செய்கிறது இந்த புதியவகை தொழில்நுட்பம்.

-செந்தில் முருகன்,சென்னை.

Comments