காலில் விழுந்து அரசு ஊழியர் மன்னிப்பு கேட்ட விவகாரம் - வீடியோ எடுப்பது தெரிந்தவுடன் காலில் விழுந்து நடித்தது அம்பலம்..!

 

-MMH

               கோவை ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் பொய்யான தகவல் அளித்த வி.ஏ.ஓ., மற்றும் வி.ஏ.ஓ., உதவியாளர் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 7-ஆம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி என்பவர், கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபால்சாமி என்பவர் காலில் விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் பட்டியிலனத்தை சேர்ந்த முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாகக்கூறி கோபால்சாமி மீது பி.சி.ஆர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல்துறையினர் வழக்குப்திவு செய்தனர்.

இதற்கு எதிர்வினையாக கோபால்சாமி தரப்பில், 'விவசாயியான நான் எனது நிலப்பிரச்சனை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி கொண்டிருந்தபோது, அலுவலக உதவியாளர் முத்துசாமி திடீரென எனது கன்னத்தில் பலமாக அறைந்து கீழே தள்ளினார். மேலும் முத்துசாமியை நான் எனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லவே இல்லை' என்று புகார் கொடுக்கப்பட்டது.

அடித்த முத்துசாமியை விட்டுவிட்டு கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் இது குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரியும், கோபால்சாமியின் சொந்த கிராமமான கோபிராசிபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது ஊர்களில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கோபால்சாமியின் ஊர் மக்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங்கை சந்தித்து, கோபால்சாமியை முத்துசாமி தாக்கி கீழே தள்ளும் காட்சியை தாங்கள் கொண்டுவந்த லேப்டாப்பில் காண்பித்தனர்.

மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனுவும் அளித்தனர். தற்போது வெளியியாகியுள்ள அந்த வீடியோ ஆதாரம் இவ்விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த முத்துசாமியை, மாற்று சமூகத்தை சேர்ந்த கோபால்சாமி அவதூறாக எதுவும் பேசவில்லை என்பதுடன், இந்த விவகாரத்தை வேண்டுமென்று திட்டமிட்டு சாதி ரீதியாக தவறாக சித்தரித்தது தெரிய வருகிறது.

இவற்றை அடிப்படையாக வைத்து, மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் புதிதாக வெளியான வீடியோ அடிப்படையில் விசாரணையில் பொய்யான தகவல் அளித்ததால் குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமாக செயல் பட்டதற்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

-Ln இந்திரதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்.

Comments