எச்சரிக்கை உணர்வுடன் நடந்து 3வது அலை பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்! - கோவை எஸ்.பி பேட்டி!!
எச்சரிக்கை உணர்வுடன் நடந்து 3வது அலை பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் கோவை எஸ்.பி செல்வ நாகரத்தினம் பேட்டி.
கோவை: மனித உரிமை மற்றும் சமூக நீதி பணி சார்பில் கோவை அவிநாசி சாலை உப்பிளிபாளையம் காவலர் சமுதாயக்கூடம் அருகே இலவச முகக் கவசம், சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனித உரிமை மற்றும் சமூக நீதி பணி கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் இம்ரான், துணைத்தலைவர் டோனி சிங் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியினை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 30 முதல் 40 ஆயிரம் வரை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நாம் கேரளா எல்லை அருகே உள்ளதால், அங்கு இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசின் அறிவுறுத்தலை பொதுமக்கள் எச்சரிக்கையாக கடைப்பிடித்து 3-வது கொரோனா அலை பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். தொடர்ந்து, அவர் தொகுதி தவூதி பிகுரோ சமாஜ் சார்பில் உப்பிளிபாளையம் சிக்னல் அருகே வாரம் தோறும் வெள்ளிக்கிழமை 200 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மனித உரிமை மற்றும் சமூக நீதி பணி உறுப்பினர்கள் கணபதி சுப்பிரமணியம், சுரேஷ், சங்கர் நாராயணன், மாதவன், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
Comments