சிங்கம்புணரியில் காற்றுடன் கூடிய கனமழை! மின்மாற்றி வெடித்ததால் நகரில் மின்தடை!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நேற்றிரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவிய சூழலில், இரவில் வெப்பச்சலனம் காரணமாக இரவு 7 மணிக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சிங்கம்புணரியில் கனமழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சிங்கம்புணரி, காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், மருதிப்பட்டி, முறையூர், கோவில்பட்டி மற்றும் கிருங்காக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் சீரான கனமழை பெய்தது. மழையின்போது சிங்கம்புணரி நகர்பகுதியில் உள்ள ஒன்றுமில்லை யோசிக்கறீங்க நம்ம ஒரு மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்), திடீரென வெடித்ததால் நகரின் சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. கடந்த16 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
இன்று காலையிலிருந்து மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பெய்த கனமழையின் காரணமாக இன்று வியாழக்கிழமை சிங்கம்புணரி சந்தை நடக்கும் இடம் பெருமளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், சில வியாபாரிகள் கடைகள் போடமுடியாமல் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து கடைகள் போட்டுள்ளனர். எஸ்.வி.மங்கலத்தில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நீர் தேங்கி நின்றது. கனமழையால் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 52.2மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments