மானாமதுரையில் அமமுக வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல்! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பரிதாபம்.!
வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு. முருகானந்தம் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு டிடிவி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு.முருகானந்தம். இவர் இன்று மானாமதுரை அருகே சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.
அங்கிருந்த பொதுமக்கள், தாக்குதலைக் கண்டு விரைந்து வரவே, முருகானந்தத்தை தாக்கிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதனையடுத்து, அவரை மீட்ட பொதுமக்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், முருகானந்தம் விரைந்து உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு.முருகானந்தம் அவர்கள் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகானந்தம் விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அப்துல்சலாம், திருப்பத்துர்.
Comments