கேமராவை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள்! ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட உரிமையாளர்! !

   -MMH

   நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது39). ஸ்டூடியோ உரிமையாளர். இவர் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கேமராவை வாடகைக்கு விட்டு வந்தார். இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த அஜித் (வயது25). அவருடைய நண்பர் தீனா (25) ஆகியோர் வெங்கடேசை தொடர்பு கொண்டு வீடியோ கேமராவை ரூ.5 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் கேமராவை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

கேமராவை 2 பேரும் மோசடி செய்துள்ளதை அறிந்த வெங்கடேஷ், போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனது கேமரா மீண்டும் கிடைக்காததால், தொழிலை நடத்த முடியாமல் வெங்கடேஷ் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவருத்தம் அடைந்த வெங்கடேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை-காரமடை இடையே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

விசாரரணையில், சேலத்தை சேர்ந்த அஜித், தீனா, அவருடைய கூட்டாளிகளான குணசேகரன் (29), விமல் (29) ஆகிய 4 பேரும் சேர்ந்தது ரூ.6 லட்சம் மதிப்புள்ள கேமராவை வாடகை எடுத்து மோசடி செய்ததால் தான் வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த கேமரா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான குணசேகரன் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 

கேமராவை மோசடி செய்ததால் ரெயில் முன் பாய்ந்து ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments