அமைச்சர் செந்தில்பாலாஜி - ஈசன் முருகசாமி சந்திப்பு...!!
சென்னையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.
அப்போது, விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 KV திட்டப்பணிகள் வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் ஆனால் தற்போது அமைச்சர் கூறியதாக கூறிக்கொண்டு அதிகாரிகள் காங்கேயம் வட்டம் ஊதியூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யில் திட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர் என்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முறையிட்டனர்.
இதுகுறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, தான் அவ்வாறு கூறவில்லை என்றும் அதற்கான எந்த உத்தரவும் நான் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.
எனவே சங்கம் தரப்பில் உடனடியாக திட்ட பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.எனவே இந்த வழக்கு முடியும் வரை எந்த திட்டப் பணிகளை செய்யக்கூடாது என்றும் அமைச்சரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.
திட்டப் பணிகள் முடிந்த 16 மாவட்டங்களில் 14 உயர் மின் கோபுர திட்டங்களுக்கு இன்னும் சரிவர இழப்பீடு கொடுக்கப்பட வில்லை என்றும் பல பகுதியில் கொடுக்கப்பட்ட இழப்பீடு சரியான முறையில் நிர்ணயித்து கொடுக்கப்படவில்லை என்றும் மிகக்குறைவாக பல பகுதியில் உள்ளது என்பதையும் அமைச்சர் கவனத்திற்கு சங்கத்தினர் கொண்டு சென்றனர்.
அதேபோல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் தென்னை மரங்களுக்கு இழப்பீட்டு தொகை 36 ஆயிரத்து 450 ரூபாய் என்ற அடிப்படை விலை இல்லாமல் 32 ஆயிரத்து 450 ரூபாய் என்ற விலை நிர்ணயித்து கொடுத்துள்ளனர்.
ஆனால் அரசு அடிப்படை விலையாக 36 ஆயிரத்து 450 ரூபாய் என்ற உத்தரவு அரசாணை மூலம் கொடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தென்னை மரங்களுக்கு 28,000 ரூபாய் என்ற விலையிலே கொடுத்துள்ளனர்.
அதையும் 36,450 ரூபாய் என்ற விலையில் இழப்பீடு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
அதற்கான அரசாணையும் அமைச்சரிடம் தரப்பட்டது.
மரங்களுக்கான மீதமுள்ள தொகை உடனடியாக கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நிலத்திற்கான இழப்பீடும் நிறைய பகுதிகளில் சரிவர கிடைக்காமல் குறைந்தபட்சமாக நிர்ணயித்துள்ளது என்றும் அதை உடனடியாக தலையிட்டு சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பவர்கிரிட் அதிகாரிகள் மற்றும் மின்சார துறை அதிகாரிகளிடம் பேசுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
ஆனால் எங்கள் தரப்பில் நீங்கள் வாய்மொழியாக கூறும் உத்தரவை அதிகாரிகள் சரிவர செயல்படுத்துவதில்லை என்றும் எங்களுக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு வேண்டும் என்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் தென்னை மரங்களுக்கு குறைந்த பட்சமாக 50 ஆயிரம்.ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நிலத்திற்கான இழப்பீடு பத்து மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும் தற்போது வழங்கப்பட்டு வரும் தொகை மிகவும் சொற்ப தொகை என்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளதாகவும் கூறினர்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு நிலத்திற்கான இழப்பீட்டை 100 சதவீதம் மற்றும் 20 சதவீதம் என்பதை 200 சதவீதம் மற்றும் 100 சதவீதம் என்று மாற்ற வேண்டும் என்றும் அதை 2.75 மடங்கு என்பதை 10 மடங்காக ஆக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அமைச்சர், வரும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
மேலும் திட்டப் பாதையில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடுகளுக்கு இது வரை இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்கப்படவில்லை எனவும் சந்தை மதிப்பில் அதற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
நிலம், மரங்களுக்கு 100 சதவீத ஆதார தொகை சொலேசியம் விவசாயிகளின் சட்டப்படியான உரிமை அதற்கான அரசாணை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர் முதல் திருப்பூர் வரை உள்ள 765 KV உயர்மின் கோபுரதிட்டம் நிச்சயமாக சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் என்பதிலும் அதேபோல் பயிர் மற்றும் மரங்களுக்கான இழப்பீடு மற்றும் நிலத்திற்கான இழப்பீட்டு சரிவர கிடைப்பதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்கண்ட அமைச்சர் சந்திப்பு நிகழ்வில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் பவானி கவின் மற்றும் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹரி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தாமு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் குமரவேல், சங்கர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஊத்துக்குளி தங்கவேல் மற்றும் படியூர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தகவலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செய்தி தொடர்பாளர் பவானி கவின் தெரிவித்துள்ளார்.
- பத்திரிகையாளர்,
ஊடகவியலாளர்
-ஆர்.கே.பூபதி.
Comments