கொட்டாம்பட்டி அருகே காரை வழிமறித்து நகை, பணம் கொள்ளையடித்த 6 பேர் கைது!

   -MMH 

கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் காரை வழிமறித்து 166 பவுன் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, தத்தனேரி பகுதியில் உள்ள பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 30) மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி மாலை, மதுரையிருந்து 50 லட்ச ரூபாயுடன் மைக்கேல்ராஜ், அந்த நிறுவன பணியாளர் செந்தில்குமார், கார் ஓட்டுனர் சரவணன் ஆகியோர், தங்களின் விழுப்புரம் கிளைக்கு ஒரு காரில் சென்றனர்.

பின்னர் 8ஆம் தேதி இரவு 7 மணியளவில் விழுப்புரம் கிளை நிறுவனத்தில் இருந்து 166 பவுன் நகைகள், ₹.1 லட்சம் ரொக்கம் எடுத்துக்கொண்டு மதுரைக்கு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர். நள்ளிரவில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்துள்ள அய்யாபட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் கார் வந்தபோது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் முந்திச் சென்று அவர்களை வழிமறித்து நின்றது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அரிவாள் உள்பட ஆயுதங்களை காட்டி மிரட்டி அடகு நிறுவன ஊழியர்களை கீழே இறக்கிவிட்டு 166 பவுன் நகைகள், ₹.1 லட்சம் மற்றும் காரையும் பறித்துக்கொண்டு தப்பியது.

இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் கொட்டாம்பட்டி காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் கருங்காலக்குடி அருகே உள்ள சுக்காம்பட்டியில் அனாதையாக நின்ற அடகு நிறுவன ஊழியர்களின் காரை மீட்டனர். மேலும், வழக்குப்பதிவு செய்து நகை, பணத்துடன் தப்பிய கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த சம்பவத்தில் துப்புதுலக்க, மேலூர் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. (இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து கடந்த டிசம்பர் 9 அன்று நமது இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம் - https://www.nalaiyavaralaru.page/2021/12/166.html)

தனிப்படை காவல்துறையினர், பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தின் மதுரை மற்றும் விழுப்புரம் கிளைகளில் பணி புரியும் அனைத்து ஊழியர்களின் செல்போன் அழைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த நபர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  இதில், மதுரை நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரியும் மதுரை துவரிமான் பகுதியை சேர்ந்த மகேஷ்வரனுக்கு(48) தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் விழுப்புரத்தில் இருந்து நகையுடன் கார் வருவது குறித்து சமயநல்லூர் தோடனேரியை சேர்ந்த முத்துப்பாண்டி(46) என்பவருக்கு தகவல் கொடுத்ததும், முத்துப்பாண்டி ஒரு கும்பலை தயார் செய்து காரை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டம் போட்டதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(21), சிவகங்கையை சேர்ந்த நாராயணன்(41), தஞ்சாவூர் ராஜ்குமார்(36), தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த மணிகண்டன்(34) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 

மேலும் இவர்களிடம் இருந்து 76 பவுன் நகையை தஞ்சாவூரில் பறிமுதல் செய்து மீட்டனர். மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் சிவகங்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்றும் பலர், மீதமுள்ள நகைகள் குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

- மதுரை வெண்புலி, பாரூக்.

Comments